குமரி எஸ். நீலகண்டன் முதுநிலை அறிவிப்பாளர் (பணி நிறைவு) அகில இந்திய வானொலி, சென்னை.;
கிராமங்களில் மாடுகள் மேய்வதற்கு கூட புல்கள் இல்லாத அளவிற்கு கோடையின் வெப்பம் ஏறுகிற மாதமிது. நகரங்களில் மட்டும் இப்போது கடுங் கோடையிலும் வெப்பத்தின் உக்கிரத்திலும் புற்களைக் காணலாம். அதன் பசுமை மாறாமல் காணலாம். தண்ணீரின்றி வளரும் அந்த பிளாஸ்டிக் புற்கள்தான் நகரங்களின் மோசமான ஒரு வளர்ச்சியின் அடையாளம். புற்களில்லாத பகுதிகளில், பசுமையான பிளாஸ்டிக் புற்களினிடையே பசு சிற்பங்கள் அசையாமல் மேய்வதைத்தான் நாம் கண்டு வியக்க இயலும். கோடை வெப்பத்திலும் அழகர் ஆனந்தமாய் வைகையாற்றில் எழுந்தருளி அருள்பாலிப்பார். வியர்வை சொட்டசொட்ட கண்டு தரிசிப்போம். ஆண்டுதோறும் காணும் அழகர் என்றாலும் நமக்கு அலுக்காது. கோடை வெப்பத்தைத் தணிக்க குடி நீரும் குளிர் நீரும் பிளாஸ்டிக் பைகளில்தான் வாங்கி குடிக்கிறோம். சில வீடுகளில் அலங்காரமாய் பாய்கிற நீர் போல் மிளிரும் பொம்மைகளும் நம்மை எதிர்காலத்தை எண்ணி அச்சுறுத்துகின்றன. முந்தையக் காலங்களில் முதலாளிக்கு வீசுவதற்காக ஒரு தொழிலாளி இருந்தான். ;