ச. சிங்கராயர், தானம் அறக்கட்டளை ;
நாம் 1950இல் சுதந்திரக் குடியரசானபோது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் மத்திய மாநில நிர்வாகங்கள் பற்றிய சட்டங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. உள்ளாட்சி நிர்வாகங்கள் பற்றி கவனத்தில் கொள்ளப்படவில்லை. இதனால் நமது ஜனநாயகத்தில் ஏற்பட்ட இடைவெளியை உணர்ந்த மத்தியஅரசு 1992ஆம் ஆண்டு நமது அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, அதன்மூலம் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உரிய சட்ட அந்தஸ்தை வழங்கியது. அதன்படி 1994ஆம் ஆண்டிலிருந்து மாநிலங்கள் தோறும் உள்ளாட்சி நிர்வாகங்கள் நடைமுறைக்கு வந்தது. உள்ளாட்சிகள், நகர்ப்புற உள்ளாட்சிகள் என்றும், கிராமப்புற உள்ளாட்சிகள் என்றும் பகுத்து அந்தந்த பிரிவினருக்கு உரிய நிர்வாக அந்தஸ்தை வழங்கியது. கிராமப்புற உள்ளாட்சிகளில் கிராம ஊராட்சி, ஒன்றிய ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சி என மூன்று நிலைகளில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது. கிராம ஊராட்சியில் மக்களோடு நேரடித் தொடர்பு இருப்பதால் கிராமசபை என்னும் மக்கள்சபை ஏற்படுத்தப்பட்டு, அது அடித்தள மக்களாட்சியை வலுப்படுத்தக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாகக் கருதப்படுகிறது. ;