பேராசிரியர் பெ.விஜயகுமார் ;
ஜப்பானியக் கப்பலில் கனடாவிற்குக் குடிபெயர்ந்து வாழச் சென்ற இந்தியர்கள் சிலரின் தோல்விப் பயணத்தைச் சொல்வது தான் மல்விந்தர்ஜித் சிங்கும், குருதேவ் சிங் சித்தும் இணைந்து எழுதிய நூல் ’கோமகட்டா மாரு’. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் வெள்ளையர்கள் கனடாவில் குடியேறினர். அதேபோல் சீனா, ஜப்பான், இந்தியா போன்ற ஆசியா நாட்டு மக்களும் வாழ்வைத் தேடி கனடாவை நோக்கிப் பயணித்தனர். ஆங்கிலேய அரசு பஞ்சாபில் கடும் நில வரியை விதித்தது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளானர். வறுமை அவர்களை வாட்டியது. வறுமையிலிருந்து தப்பிக்க நீண்ட பயணம் மேற்கொண்டு தொலைதூர நாட்டில் புது வாழ்வைத் தொடங்கிடத் தயாராயினர். இந்தியர்களின் வருகையைத் தடுக்க விரும்பிய கனடா அரசு எந்தவொரு நாட்டிலிருந்தும் நேரடியாக வரும் பயணிகள் மட்டுமே கனடாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று குடியேற்றச் சட்டத்தைத் திருத்தியது. இந்தியாவிலிருந்து கனடாவுக்கு நேரடியாக எந்தவொரு கப்பலும் அப்போது செல்லவில்லை என்பதை அறிந்தே கனடா அரசு இத்தகு மாற்றத்தைக் கொண்டுவந்தது. ;