முனைவர் சரஸ்வதி ஐயப்பன் தமிழ் பேராசிரியர் (பணி நிறைவு), பாத்திமா கல்லூரி. ;
காலச் சூழலறிந்து, தேவையறிந்து தன் தாய்மொழியாம் தமிழன்னைக்கு அருந்தொண்டாற்றியவர் மூதறிஞர், கா. அப்பாத்துரை ஆவார். வரலாறு, இதழியல், தாய்மொழித் தொன்மை, மொழிபெயர்ப்பு, பொது அறிவு நுணுக்கம் போன்ற பல துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். எந்த ஒரு உயர்பதவியையும் கருத்தில் கொள்ளாத மொழிப் போராளி. வளரும் தலைமுறையினர் தேடிக் கண்டெடுத்துப் பின்பற்ற வேண்டிய பெருந்தகைமையாளர். முன்மொழிக்கொள்கை பேசும் இந்நாளில் இளையோருக்கு இணக்கமான ஏற்றம் தரும் வழிகாட்டி. நாற்பது மொழிகள் கற்றவர். குறிப்பாக, தமிழ், ஆங்கிலம், வடமொழி, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் பேசவும் எழுதவுமான தேர்ச்சி பெற்றவர். அவரது பன்மொழிப்புலமை ஆர்வத்தைச் சிறப்பிக்கும் வண்ணம் தமிழறிஞர்கள் நடுவே, பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை என்று பெருமைப்படுத்தப்பட்டவர். ;