அருள்நிதி பகவதிமோதிலால்
ஆண்டுக்கு ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை வெளிச்சம் போட்டுக்காண்பித்து வருகிறது. அதுபோலவே பெண்கள் தற்கொலையும் அதிலும் குறிப்பாகத் திருமணமான இல்லத்தரசிகளின் தற்கொலையும் சமீபகாலமாக அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. உலகப் பெண் மக்கள்தொகையில் இந்திய பெண்கள் 18 சதவிகிதத்தினர் உள்ளனர். ஆனால் உலகளாவிய பெண் தற்கொலை இறப்புகளில் 36 சதவிகிதம் இந்தியப் பெண்களாக இருக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். குடும்பப் பெண்கள் தற்கொலைக்குக் குடும்ப வன்முறை, மனஅழுத்தம், பொருளாதாரச் சிக்கல்கள், சமூகச் சிக்கல்கள் எனப் பல காரணங்கள். தற்கொலையைத் தவிர்க்க பெண்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது அவசியம். என்ன செய்யலாம்..?
ஆ. மாலா ஆறுமுகம் தேசிய தொலைத் தொடர்பு பயிற்சி மையம், திருவனந்தபுரம்.
கூட்டுக்குடும்பம் என்பது இன்றைக்கு அரிதாகிவிட்டது. குடும்பத்தில் எல்லோரும் சுகமா? என்று கேட்ட காலம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. இன்றைக்கு குடும்பம் என்பது கணவன், மனைவி, குழந்தை எனச் சுருங்கிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் சிங்கிள் பேமிலி அதிகரித்து வருகிறது. அதாவது குழந்தையும் அப்பாவும் அல்லது குழந்தையும் அம்மாவும் என இருவர் மட்டுமே வாழும் வாழ்க்கை அது.